“அ.தி.மு.க அரசு நீட் தேர்வினை ஏற்றுக்கொண்டால் அதுவே மிகப்பெரிய துரோகம்” : கனிமொழி எம்.பி ..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அத்தைக்கொண்டான் பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க சார்பில் பாராளுமன்ற குழு தி.மு.க துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் தி.மு.க வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான கீதாஜீவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., “நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்து. தமிழக மாணவர்களை பாதிக்கக்கூடிய ஒன்றாக இன்றைக்கு நீட் உள்ளது. நீட் தேர்வுக்கு பயந்து இந்தாண்டு கூட ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். எத்தனையோ உயிர்களை நீட் தேர்வுக்காக இழந்திருக்கிறோம்.

நீட் தேர்வு வேண்டாம் என்று தி.மு.கவும், எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தி வருகிறோம். எக்காரணம் கொண்டும் தமிழக அரசு நீட் தேர்வினை ஏற்றுக்கொள்ளக்கூடாது. தொடர்ந்து எதிர்க்க வேண்டும். இல்லையென்றால் தமிழக அரசு மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய தூரோகமாக அமையும்.