அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மாரடைப்பால் காலமானார்..


மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் (69) மாரடைப்பால் காலமானார். இவர் அதிமுக சார்பில் மூன்று முறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர்.

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள ஜீவா நகர் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த எம்.எல்.ஏ ஏ.கே.போஸிற்கு நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

1972-ம் ஆண்டு முதல் அதிமுக-வில் இருந்து வந்த ஏ.கே. போஸ், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பதிவி வகித்துள்ளார்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.எம். சீனிவேலு போட்டியிட்டார்.

ஆனால் அவர் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே மரணம் அடைந்தார். இதன் காரணமாக நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஏ.கே. போஸ் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.