வேளாண் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு- கோவை வேளாண் பல்கலை. துணைவேந்தர் அறிவிப்பு

வேளாண் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி அறிவித்துள்ளார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் ராமசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளும், 4 தொழில் முறை பாடப்பிரிவுகளும் செயல்பட்டு வருகிறது.

இதில் உறுப்பு கல்லூரிகளில் 987 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 2,160 இடங்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 147 இடங்கள் உள்ளன.

தொழிற்நுட்ப படிப்புகளில் உறுப்பு கல்லூரிகளில் 1,262 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 2,160 இடங்களும் என மொத்தம் 3,422 இடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்த கல்வி ஆண்டு முதல் இணைய தளம் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான பிரிவில் விண்ணப்பிப்போர் தேவையான சான்றிதழ்களை குறிபிப்பிட்ட நாட்களில் நேரில் கொண்டு வந்து சரி பார்க்க வேண்டும்.

மேல்நிலை பள்ளி தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு தர வரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறும்.
வருகிற 18-ந்தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள். அடுத்த மாதம் 17-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றுகள் சரிபார்ப்பு அடுத்த மாதம் 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடைபெறுகிறது.

தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் 22-ந் தேதி வெளியிடப்படுகிறது. சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி நடக்கிறது.

9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை முதல் கட்ட ஆன்லைன் கவுன்சிலிங் நடக்கிறது. 16-ந் தேதி தொழில் கல்விக்கான கலந்தாய்வும், 17,18-ந் தேதிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மற்றும் நிறுவனங்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது.

23-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை 2-ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. ஆகஸ்டு 1-ந் தேதி கல்லூரிகள் தொடங்குகிறது. 31-ந் தேதி வரை சேர்க்கை நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.