எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கப்படவில்லை : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு…


எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டசபையில் நேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், “மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், கடந்த 2 நாட்களாக பத்திரிகைகளில் வரும் ஒரு செய்தி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று. நிதி ஏன் ஒதுக்கப்படவில்லை?” என்றார்.

அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. மத்திய அரசும் அதற்கான அனுமதியை வழங்கிவிட்டது. மத்திய மந்திரி சபை கூட்டத்தில்தான் அதற்கான நிதி ஒதுக்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு 5 நிபந்தனைகளை விதித்தது. அந்த 5 நிபந்தனைகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, செய்துதர இசைந்துள்ளது. ரூ.1,500 கோடியில் 750 படுக்கை வசதியுடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி” என்றார்