எய்ம்ஸ் மருத்துவமனை : மத்திய,மாநில அரசுகளுக்கு : ஸ்டாலின் கேள்வி..

“மத்திய அரசின் 2017 – 2018 நிதி நிலை அறிக்கையின்படி ஜார்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ள நிலையில் 2015 – 2016 மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை இதுவரை அமைக்காதது ஏன்?”

– திமுக செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின் மத்திய – மாநில அரசுகளுக்கு கேள்வியெழுப்பியுள்ளார்

“தமிழகத்தில் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) மருத்துவமனை 2000 கோடி ரூபாயில் அமைக்கப்படும்”, என்று 2015-2016 ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட ஆரவாரமான அறிவிப்பு இன்னும் கிடப்பில் போடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக மக்களுக்கு உலக தரத்திலான உயர்தர சிகிச்சை அளிக்கும் வாய்ப்புள்ள இந்த மருத்துவமனை அமைக்கும் பணி, மத்திய அரசின் மூன்று நிதி நிலை அறிக்கைகள் கடந்து சென்றுவிட்ட நிலையிலும், இன்னும் அடுத்தகட்ட நடவடிக்கையின்றி நிலுவையில் இருப்பது ஏன் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துமனை அமைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த விளக்க முடியாத தாமதம், தமிழகத்திற்காக வெளியிடப்பட்ட பட்ஜெட் அறிவிப்புகளை நிறைவேற்றுவதில் கூட மத்திய பா.ஜ.க. அரசு காட்டும் மெத்தனத்தையும் ஆர்வம் இன்மையையும் எடுத்துக் காட்டுகிறது.

தஞ்சாவூரில் உள்ள செங்கிபட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், புதுகோட்டை மாவட்டத்தில் உள்ள புதுகோட்டை நகரம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துரை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செங்கல்பட்டு உள்ளிட்ட ஐந்து இடங்களை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஏற்ற இடங்களாகத் தேர்வு செய்து, மாநில அரசு மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறது.

இந்த ஐந்து இடங்களிலும் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியி லிருந்து 25 ஆம் தேதி வரை மத்திய குழு வந்து, ஆய்வும் செய்து விட்டுத் திரும்பிவிட்டது. அதன்பிறகு, தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு அருகில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு மாநிலத்தில் உள்ள ‘குதிரை பேர’ அதிமுக அரசு உடனடியாக விவரங்களை வழங்காமல் தாமதம் செய்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இதுதொடர்பாக தொடரப் பட்ட வழக்கில், “2017 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்து வமனை அமைக்கும் இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்”, என்று கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திலேயே நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விட்டது.

ஆனால், இன்றுவரை தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதற்கான இடத்தை மத்திய – மாநில அரசுகள் இறுதி செய்யவில்லை. “மாநில நலன்களுக்காக மத்திய அரசுடன் ஒத்துப் போகிறோம்”, என்று அரசு செலவில் விழா நடத்தி, வீண் தம்பட்டம் அடித்து வரும் ‘குதிரை பேர’ அரசின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட கொண்டு வர முடியாமல் செயலிழந்து நிற்கிறது.

தங்களுடைய பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் எதிராளிகளைப் பழிவாங்கவும் பிரதமர் மோடி காட்டிவரும் கருணையைப் பயன்படுத்திக் கொள்ளும் இபிஎஸ் – ஓபிஎஸ் குழுவினர், அதை தமிழக நலனுக்காகப் பயன்படுத்த ஏன் தயங்குகின்றனர் என்பதுதான் மர்மமாக இருக்கிறது.

“ஜார்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துமனை அமைக்கப்படும்”, என்று 2017-18 ஆம் ஆண்டு மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு செயல்வடிவம் பெற்றுவிட்ட நிலையில், அதற்கு முன்பே 2015-16 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துமனை இன்னும் அமைக்கப்படாமல் இருப்பதற்கு மத்திய – மாநில அரசுகள் நடத்தும் கபடநாடகமே காரணம்.

தமிழக மக்களின் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதில் இங்குள்ள ‘குதிரை பேர’ அதிமுக அரசுக்கோ, குட்கா புகழ் அமைச்சருக்கோ சிறிதும் அக்கறையில்லை என்பது இதன்மூலம் மேலும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் அதிமுக அரசு வெளியிட்ட 110 விதியின் கீழான அறிவிப்புகள் போல், மத்திய நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பும் இன்றுவரை அமலுக்கு வராமல் நிலுவையில் வைக்கப்பட்டு இருப்பது, தமிழக மக்களின் நலன் மீது மத்திய பா.ஜ.க. அரசுக்கும் எவ்வித அக்கறையும் இல்லை என்பதையே காட்டுகிறது.
ஆகவே, இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ்

மருத்துமனையை தமிழகத்தில் அமைப்பதற்கு, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாராளுமன்றத்தில் அதிமுகவிற்கு உள்ள பலத்தை பயன்படுத்தி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதை உடனே செயல்படுத்து வதற்கான உத்திரவை மத்திய அரசிடமிருந்து பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த முயற்சிக்கு மாநிலங்களவையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒருவேளை, பலத்தை பயன்படுத்த ‘குதிரை பேர’ அரசு தவறினால், ‘ஒன்றுக்கும் உதவாத ஒதியமரம் போன்றதுதான் அந்த பலம்’, என்று தமிழக மக்கள் முடிவுசெய்து விடுவார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.