இனி அமமுக தான்… அதிமுக விரைவில் காணாமல் போகும்: டிடிவி தினகரன் தடால்

அமமுகவையே தொடர்ந்து அரசியல் கட்சியாக நடத்தப் போவதாகவும், அதிமுக என்பது விரைவில் காணாமல் போகும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறியதாவது:

அமமுக தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். கட்சியின் தலைமைப் பதவியை சசிகலாவுக்காக காலியாக வைத்திருக்கிறோம். தேவைப் பட்டால் இந்தக் கட்சியின் தலைவராக அவர் தேர்வு செய்யப்படுவார். தமிழக அரசியலில் இனி சின்னத்திற்கு முக்கியத்துவம் இருக்காது. மக்கள் முடிவு செய்துவிட்டால் யாரை வேண்டுமானாலும் தேடிப்பிடித்து தேர்வு செய்வார்கள். ஆர்கேநகர் இடைத்தேர்தலில் அதிகவும் இரட்டை இலைச் சின்னமும் என்ன கதியானது என்று பார்க்கவில்லையா… இதை ஆணவத்திலோ, அகங்காரத்திலோ சொல்லவில்லை.

அதிமுகவுக்கான சட்டப்போராட்டத்தை சசிகலா தொடர்வார். டிடிவி தினகரன் தொடர்ந்து அமமுகவை ஜெயலலிதா தொண்டர்களுடன் சேர்ந்து நடத்தட்டும் என சசிகலா அனுமதி கொடுத்துவிட்டார். மதுரை ஆதீனத்திற்கும் அமமுகவுக்கும் தொடர்பில்லை. அவர் சொல்வதற்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை.

அம்மா படத்தை கொடியில் போட்டுள்ளோம். இதே கொடிதான் கட்சியைத் தொடர்ந்து நடத்துவோம். அம்மாவின் படத்தை கொடியில் இருந்து எப்போதுமே நீக்க மாட்டோம். தொண்டர்களின் விருப்பம் அதுதான். நாங்கள் அண்ணாவைப் பார்த்ததில்லை. ஜெயலிலதாவைப் பார்த்து வளர்ந்தவர்கள். அதனால் அம்மா வழியில் அரசியல் கட்சியை நடத்துவோம்.

அதிமுக விரைவில் காணாமல் போகப்போகிறது. அமைச்சர்களாக இருப்பவர்கள் அனைவரும் கட்டிப்பிடித்து அழும் காலம் விரைவில் வரும். அதிமுகவைக் கொண்டு வந்து அமமுகவில் சேர்த்து விடுவோம்.

ரஜினி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. அது அவரவர் விருப்பம். எத்தனை கட்சிகள் வேண்டுமானாலும் வரும். அது குறித்து நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

4 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கும் பரிசுச் சின்னத்தையே ஒதுக்கக் கோரி மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.