ஆந்திராவில் காங்கிரஸ் உடன் மகா கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் திட்டம்?..

வரும் 2019ல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் ஆந்திர மாநில முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு, காங்கிரஸ் தலைமையில் மகா கூட்டணியை அமைக்க திட்டமிட்டுள்ளார்.

இது மாநில அளவில் நாயுடுவிற்கு எதிரான கூட்டணியையும், மத்தியில் பாஜகவையும் எதிர்க்க உதவிகரமாக இருக்கும் என்று சந்திரபாபு நாயுடு கருதுகிறார்.

காங்கிரஸில் இருக்கும் தலித் குழுவினரும், தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவைப் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் இது தற்கொலைக்கு சமமான ஒன்று என ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரகுவீரா ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

தலித்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அதிக அளவில் பெற்று விடும் என்று காங்கிரஸ் தலித் தலைவர்கள் கூறுகின்றனர்.

இந்த விஷயத்தில் நாயுடுவை விட, ஜெகன் மோகன் ரெட்டி மிகவும் சவாலாக இருப்பார் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சூழலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் உம்மன் சாண்டி கூறுகையில், எங்களுக்கு ஜெகன் தான் மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்கிறார்.

ரகுவீரா ரெட்டி குழுவினரால் ஏற்பட்டுள்ள தொடர் அழுத்தம் காரணமாக, காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என்று சாண்டி கூறுகிறார்.

தெலுங்கானாவைப் பொறுத்தவரை, வரும் சட்டமன்ற தேர்தலுக்காக தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மகா கூட்டணியை அமைத்துள்ளன.

ஆனால் ஆந்திரப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் ஒன்றாக நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த மாநிலத்தில் தெலுங்கு தேசம், காங்கிரஸ் இடையேயான கூட்டணி அமைவதில் சிக்கல் நீடிக்கிறது