பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா: அண்ணா சிலைக்கு திமுக தலைவர் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணா, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கையை முழங்கியவர்.

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற தத்துவத்தை போதித்தவர். அவரது 111ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து அண்ணாவின் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அதைத்தொடர்ந்து திமுக தலைமை அலுவலகமான, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.