அண்டார்டிகாவின் மிகப்பெரிய பனிப்பாறை உருக்கத் தொடங்கியது :விஞ்ஞானிகள் அச்சம் …


அண்டார்டிகாவில் ‘டாட்டன்’ பனிப்பாறை உருகத் தொடங்கியதால் கடல்நீர் மட்டம் 9.8 அடி உயரும் அபாயமுள்ளதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உலகின் 5-வது மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகா முழுவதும் பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலாலும், பருவ நிலை மாற்றம் காரணமாகவும் இங்குள்ள பனிகட்டிகள் உருகி கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது அண்டார்டிகாவில் உள்ள ராட்சத பனிப்பாறை உருகத் தொடங்கியுள்ளது. டாட்டன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பனிப்பாறை பிரான்ஸ் நாட்டின் அளவுக்கு மிகப்பெரியது.

பனிப்பாறைகள் உருகுவது குறித்து நாசா விஞ்ஞானிகள் கடந்த 2002 முதல் 2016-ம் ஆண்டு ஆய்வு செய்தனர். அதில் பனிக்கட்டிகள் உருகுவதால், ஆண்டுக்கு 125 ஜிகா டன் ஐஸ் கட்டிகளை, அண்டார்டிகா இழப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்மூலம் உலக அளவில் ஆண்டுக்கு 0.35 மில்லி மீட்டர் அளவுக்கு கடல்நீர் மட்டம் உயருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில் அண்டார்டிகாவில் உள்ள ‘டாட்டன்’ ராட்சத பனிப்பாறையும் உருக தொடங்கியுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் இப்பனிப்பாறை உருகுவதாகவும், அது மெல்ல நகர்ந்து பல நூறு மைல் தூரத்தை கடந்து விட்டதாகவும் நாசா கூறியுள்ளது. இது முழுவதுமாக கரைந்துவிட்டால் கடலின் நீர்மட்டம் 9.8 அடி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு நாடுகள், தீவுக்கூட்டங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.