ஆண்டிப்பட்டியில் அண்ணனை எதிர்த்து களமிறங்கும் தம்பி..: மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் அதிமுக-திமுக…

ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட அண்ணனும், அதிமுக சார்பில் தம்பியும் களமிறங்கப்படுவது அரசியல் ஆர்வலர்கள் இடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளரை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று மாலை 7 மணியளவில் திமுக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து இரவு 10 மணியளவில் அதிமுகவும் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

அதன்படி, ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட ஆண்டிப்பட்டி ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆ. மகாராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

அவரை எதிர்த்து போட்டியிட அதிமுக சார்பில் அக்கட்சியின் ஆண்டிப்பட்டி ஒன்றியச் செயலாளர் ஆ. லோகிராசனை அதிமுக தலைமை களமிறக்கியுள்ளது.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் மகாராஜனும், லோகிராஜனும் உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் என்பது தான்.

அண்ணன் தம்பிகள் இருவருக்கும் திமுக, அதிமுகவில் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன.64 வயதாகும் மகாராஜன் சிறுவயது முதலே திமுகவில் உள்ளார்.

அதே போன்று 60 வயதாகும் லோகிராஜனும் சிறு வயது முதலே அதிமுகவில் கோலோச்சி வருபவர். இதனையடுத்து ஆண்டிப்பட்டி தொகுதியின் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.