ஏப்ரல்18 ந் தேதியே 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் காலியாகவுள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் உட்பட 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவசா, சுசில் சந்திரா ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டனர்.

அதன்படி 2-ம் கட்டமாக வாக்குபதிவு நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். அதன்படி  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதன்படி, தமிழகத்தல் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து திருவாரூர், திருப்பரங்குன்றம், ஓசூர் உட்பட காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் விவரம்:

வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26-ம் தேதி

வேட்பு மனு பரிசீலனை: மார்ச் 27-ம் தேதி

மனுக்களை திரும்ப பெற கடைசி நாள்: மார்ச் 29-ம் தேதி

வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.