கேரளா வெள்ள நிவாரணத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ரூ.1 கோடி நிதியுதவி..


அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். வீடுகளை இழந்து, இருக்க இடமின்றி மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஏராளமானோரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

வெள்ளச் சேதத்தில் இருந்து மீள்வதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், பல நடிகர்கள், நடிகைகள் நிதியுதவி மற்றும் தேவையான பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்த ஏ.ஆர்.ரகுமான், ரூ.1 கோடி கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார்.

முன்னதாக, லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘முஸ்தபா… முஸ்தபா…’ என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடலை முடிக்கும்போது, ‘கேரளா… கேரளா… டோண்ட் வொர்ரி கேரளா… காலம் நம் தோழன் கேரளா…’ என்று பாடியிருந்தார்.

அதைக் கேட்டதும் அங்கு இருந்தவர்கள் பலத்த கரவொலி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.