ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி..

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

5-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆண்கள் ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.

முதல் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 11-0 என்ற கோல் கணக்கில் ஓமனை ஊதி தள்ளியது.

இந்திய அணி தரப்பில் தில்பிரீத்சிங் 3 கோலும், லலித் உபாத்யாய், ஹர்மன்பிரீத் சிங், நீலகண்ட ஷர்மா, கேப்டன் மன்தீப்சிங், குர்ஜந்த் சிங், ஆகாஷ்தீப் சிங், வருண்குமார், சிங்லென்சனா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தான் அணி வீரர் இர்பான் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப் படுத்தினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியை சேர்ந்த மன்பிரித் பவார் 24-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் மந்தீப் சிங் ஒரு கோலும், 42-வது நிமிடத்தில் தில்பிரித் ஒரு கோலும் அடித்து 3-1 என முன்னிலைக்கு கொண்டு வந்தனர்.

அதன்பின்னர் ஆட்டம் முடியும் வரை இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இறுதியில், இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.