பாபாராம்தேவ் நிறுவன இயக்குனர்கள் எஸ்பிஐ வங்கிக்கு ரூ.411 கோடி நாமம் ..

எஸ்பிஐ வங்கியில் ரூ.411 கோடி கடன் பெற்ற 3 தொழிலதிபர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற பின் கடன் கொடுத்த வங்கி புகார் தெரிவித்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கி அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது குறித்து சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ”ராம் தேவ் இன்டர்நேஷனல் எனும் நிறுவனத்தின் 3 இயக்குநர்கள் நரேஷ் குமார், சுரேஷ் குமார், சங்கீதா ஆகியோர் பல்வேறு வங்கிகளில் ரூ.411 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பியுள்ளனர்.

ராம் தேவ் இன்டர்நேஷனல் நிறுவனம் பாஸ்மதி அரிசியை மேற்கு ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வந்தது. இதற்காக எஸ்பிஐ வங்கியில் ரூ.173 கோடி கடன் பெற்றிருந்தது. இதுதவிர கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆ1ப் இந்தியா, ஐடிபிஐ, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கிகள் என மொத்தம் ரூ.411 கோடி கடன் பெற்றிருந்தார்கள்.

இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக 3 மிகப்பெரிய அரிசி ஆலைகள், 8 அரிசி ஆலைகள் இயங்கிவந்தன. மேலும், சவுதி அரேபியா, துபாய் நாடுகளில் தங்கள் அலுவலகத்தையும் ராம் தேவ் நிறுவனம் செயல்படுத்தி வந்தது.
ஆனால் வாங்கிய கடனை ராம் தேவ் நிறுவனம் செலுத்தாததையடுத்து, கடந்த 2016, ஜனவரி 17-ம் தேதி அந்தக் கடனை என்பிஏ வாக எஸ்பிஐ அறிவித்தது. கடந்த 9 மாதங்களுக்கு முன் அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் கடன் கொடுத்த வங்கிகள் அனைத்தும் கூட்டாகச் சேர்ந்து ஹரியாணாவில் உள்ள ராம் தேவ் இன்டர்நேஷனல் நிறுவனத்தை ஆய்வு செய்தன.

மேலும், வங்கிகள் ஆய்வு செய்வதற்கு முன் தொழிலதிபர்கள் மூவரும் தங்கள் தொழிற்சாலையில் உள்ள எந்திரங்கள் அனைத்தையும் பலருக்கும் விற்பனை செய்து தங்களின் பேலன்ஸ் ஷீட்டில் அதைச் சரி செய்து போலியான கணக்குகளை வங்கியில் தாக்கல் செய்துள்ளனர்.
அதன்பின்புதான் அந்த நிறுவனம் தொடர்பாக வங்கிகள் விசாரணையை முழுமையாக நடத்தியபின் 2020, பிப்ரவரி 25-ம் தேதி எஸ்பிஐ வங்கி சார்பில் சிபிஐ அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “ 2020, பிப்ரவரி 25-ம் தேதி எஸ்பிஐ வங்கி சார்பில் சிபிஐ அமைப்பிடம் ராம் தேவ் நிறுவன இயக்குநர்கள் 3 பேர் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது. சிபிஐ அமைப்பின் முதல் கட்ட விசாரணையில் கடன் பெற்றவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச்சென்றுவிட்டனர்.
நாட்டை விட்டு தப்பிச் சென்ற பின் அவர்கள் மீது எஸ்பிஐ வங்கி புகார் கொடுத்தால் என்ன செய்வது. அதன்பின் எவ்வாறு விசாரிக்க முடியும். ஏறக்குறைய ஓராண்டுஅந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் மூவரும் பெற்ற கடன் என்பிஏ வாக இருந்துள்ளது. அப்போதெல்லம் வங்கி புகார் கொடுக்கவில்லை.

கரோனா வைரஸ் லாக்டவுனால் எந்தவிதமான சோதனையும் இதுவரை சிபிஐ அந்த நிறுவனங்களில் நடத்தவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு வாருங்கள் என அழைக்கப்படுவார்கள். அவர்கள் விசாரணைக்கு வராதபட்சத்தில் அடுத்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.

ஏற்கெனவே விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி, ஜதின் மேத்தா போன்றோர் இதுபோல் வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டுத் தப்பியுள்ளனர்.

அவர்களைப் பிடிக்கும் முயற்சியில் சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டும் இன்னும் அழைத்துவர முடியவில்லை. அந்த வரிசையில் ராம் தேவ் நிறுவன இயக்குநர்களும் சேர்ந்துவிட்டார்கள்.