மோடிக்கு கிடைத்த அடி: திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி

 

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அடி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

நேற்றைய தினம் டெல்லியில் பாசிச பாஜக ஆட்சிக்கு எதிராக, காங்கிரஸ் தலைமையில் நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. நேற்று அத்தகைய கூட்டம் நடைபெற்ற நிலையில், 5 மாநிலத் தேர்தல் செய்தி, வெற்றிச் செய்தியாக இன்று வந்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலிலும் இது எதிரொலித்து, முழுமையான வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இப்போது ஏற்பட்டுள்ளது. 5 மாநிலத் தேர்தலில், பாஜகவின் கோட்டையாக விளங்கிய மாநிலங்களிலேயே காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த வெற்றி பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய அடியாகும். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கப் போவதாக பிரதமர் மோடி கூறினார்.

அதுமட்டுமின்றி காங்கிரஸ் அல்லாத இந்தியாவை உருவாக்கப் போவதாகவும் அவர் சொன்னார். அதுதான் மோடியின் ஆணவத்திற்கு உச்சக்கட்ட அடையாளம். ஆனால், அவர் அப்படி கூறினார் என்பதற்காக, பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று எக்காரணம் கொண்டும் நாங்கள் சொல்ல மாட்டோம். மாறாக, மதவாத ஆட்சியை ஒழிப்பதற்கு டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டணியில் எடுக்கப்பட்ட முடிவின் படி சிறப்பான கூட்டணியை அமைப்போம். அதன் மூலம் நடைபெற்று வரும் மோடி தலைமையிலான  பாசிச பாஜக ஆட்சியை அப்புறப் படுத்துவோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் அதனைக் காணப் போகிறார்கள்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.