வங்க கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி : டிச.,15, 16ல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..

வங்க கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு உருவாகி வருவதால் வரும் டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில்

தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்,

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய கடல் பகுதியில் நிலவிய வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று(டிச.,12) தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இது டிச.,15ல் ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறக் கூடும்.

இதன் காரணமாக டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்கள் டிச., 13ம் தேதி, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கும், டிச.,14ல் தென்மேற்கு கடலின் மத்திய பகுதிக்கும்,

டிச.,15ல் தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கும், மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.