வங்கக் கடலில் 26-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு…

வங்கக் கடலில் வரும் 26-ம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்துக்கு மழை கொடுக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரன் கூறியிருப்பதாவது:

இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோட்டு பகுதி மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு தென்கிழக்கே வரும் 26-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இது, 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கையை தாண்டி மன்னார் வளைகுடா வழியாக தென்னிந்திய பகுதியில் கடந்த செல்ல வாய்ப்புள்ளது.

அந்த நேரத்தில், தென் தமிழகம் மற்றும் மத்திய தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இன்று (ஏப்ரல் 22), தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய சூறைக்காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். மேலும், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, நீலகிரி மாவட்டம் உதகையில் 10 செமீ, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கோவை மாவட்டம் வால்பாறை,

சேலம் மாவட்டம் ஓமலூர், மேட்டூர் ஆகிய இடங்களில் தலா 7 செமீ, நீலகிரி மாவட்டம் குன்னூர், கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் தமிழகத்தில் வெப்பநிலை குறைந்துள்ளது. நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி அதிகபட்சமாக வேலூர், திருத்தணி ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, தொண்டியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இவ்வாறு எஸ்.பாலசந்திரன் கூறினார்.