பிர்மிங்ஹாம் டெஸ்ட் : இந்திய அணிக்கு 194 ரன்கள் இலக்கு..


இசாந்த் சர்மாவின் வேகப் பந்துவீச்சு, அஸ்வினின் நெருக்கடி அளிக்கும் சுழல் பந்துவீச்சு ஆகியவற்றை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 13 ரன்கள் பெற்ற முன்னிலையையும் சேர்க்கும் போது, இந்திய அணி வெற்றி பெற 194 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மிகவும் எளிதான இலக்காக 194 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இன்னும் இரண்டரை நாட்கள் கைவசம் உள்ளதால், இந்திய அணி நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தால் வெற்றி உறுதியாகும்.

அபாரமாகப் பந்துவீசிய இசாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்து சரிவுக்குக் காரணமாக இருந்தனர்.

மதிய உணவு இடைவேளையின் போது 7 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி அதன்பின் தேநீர் இடைவேளைக்குள் மீதமுள்ள 3 விக்கெட்டுகளையும் இழந்ததது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பர்மிங்ஹாம் நகரில் தொடங்கி நடந்து வருகிறது.

டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் அற்புதமான சதத்தால்(149 ரன்கள்) 274 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 13 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி நேற்று 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆனால், சிறிது நேரத்தில் குக் விக்கெட்டை இழந்தது. ஆட்ட நேர இறுதியில் 9 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.

முதல் இன்னிங்ஸில் அஸ்வின் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகியது போன்று, 2-வது இன்னிங்கிலும் சிறிதுகூட மாற்றமில்லாமல் அதே பந்துவீச்சில் படம் காட்டி போல்டாக்கினார் அஸ்வின்.

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கி நடந்து வருகிறது. ஜென்னிங்ஸ், கேப்டன் ரூட் களமிறங்கினார்கள். 2-வது இன்னிங்ஸில் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று தொடக்கத்திலேயே கணிக்கப்பட்டது போன்று ஆடுகளம் அஸ்வினுடைய சுழல் பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது.

அஸ்வின் வீசிய 7-வது ஓவரில் 2-வது ஸ்லிப்பில் நின்றிருந்த ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஜென்னிங்ஸ் 8 ரன்களில் வெளியேறினார். அடுத்து டேவிட் மலான் களமிறங்கினார். ரூட், மலான் நிதானமாக பேட் செய்தாலும், ரன்களைச் சேர்க்க மிகவும் சிரமப்பட்டனர்.

16-வது ஓவரில் ரூட் விக்கெட்டைப் பெற்றார் அஸ்வின். லெக் ஸ்லிப்பில் நின்றிருந்த ராகுலிடம் கேட்ச் கொடுத்து 14 ரன்களில் பெவிலியின் திரும்பினார் ரூட். அதன்பின் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.

மலானும், பேர்ஸ்டோவும் விக்கெட் சரிவைத் தடுக்கும் வகையில் கட்டுக்கோப்பாக விளையாடினர். இந்த நெருக்கடியைப் பயன்படுத்தும் வகையில் இசாந்த் சர்மா பந்துவீச அழைக்கப்பட்டார். அவரின் ஸ்விங் பந்துவீச்சு நன்றாக எடுபட்டது.

இசாந்த் சர்மா வீசிய 27-வது ஓவரில் கல்லி பாயின்டில் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து, மலான் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், இசாந்த் சர்மா வீசிய 31-வது ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

31-வது ஓவரின் 2-வது பந்தில் பேர்ஸ்டோ 28 ரன்கள் சேர்த்திருந்தபோது, முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த தவணிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த பட்லர் ஒரு ரன் எடுத்துவிட்டு, ஸ்டோக்ஸிடம் கொடுத்தார். 3-வது பந்தை சந்தித்த பென் ஸ்டோக்ஸ் 6 ரன்கள் சேர்த்த நிலையில், 3-வது ஸ்லிப்பில் இருந்த விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் உணவு இடைவேளை விடப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. மீதமிருந்த இரு பந்துகளை இசாந்த் சர்மா வீசினார். இதில் 5-வது பந்தைச் சந்தித்த குரன் ஒரு ரன் அடித்து பட்லரிடம் கொடுத்தார்.

கடைசிப் பந்தைச் சந்தித்த பட்லர் ஒரு ரன் சேர்த்த நிலையில், தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்ததால், இங்கிலாந்து அணி பெரிய சரிவைச் சந்தித்தது.

8-வது விக்கெட்டுக்கு சாம் குரனும், ஆதில் ரஷித்தும் பேட் செய்தனர். அணியின் ஸ்கோர் மந்தமாகச் செல்வதை அறிந்த சாம் குரன் விளாசலில் இறங்கினார். அதிரடியாக பேட் செய்த சாம் குரன் 54 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.

ராஷித் 16 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் கிளீன் போல்டாகினார். அடுத்து வந்த ஸ்டூவர்ட் பிராட் 11 ரன்களில் சேர்த்து, இசாந்த சர்மா பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். சாம் குரன் 63 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

53 ஓவர்களில் இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.