கிளர்ந்தெழுந்து வந்த போராட்டக்காரர்கள் : பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் கைது..


ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அணியணியாய் வரும் போராட்டக்காரர்களை தடுத்து கைது செய்ய முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆவேசப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று போராடி வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் காவிரி பிரச்சினைக்காக மக்கள் போராடிவரும் சூழ்நிலையில் இளைஞர்களை திசை திருப்பும் விதமாக ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெறக் கூடாது என்ற கோரிக்கையை தமிழ் உணர்வாளர்கள், அரசியல் கட்சிகள் வைத்தனர்.

ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிடுவோம், வீரர்களை சிறைப்பிடிப்போம் என சில கட்சிகள் அறிவித்திருந்தன.

ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது என்ற எதிர்ப்பையும் மீறி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு காவல்துறை கடும் பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதுகாப்புப் பணிக்கு 13 துணை ஆணையாளர்கள் தலைமையில் 4000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால், போராட்டம் சாதாரணமானதாக இருக்கும் என்று நினைத்த காவல்துறையினரின் எண்ணத்தை பொய்ப்பிக்கும் வண்ணம் போராட்டக்காரர்கள் அணி அணியாய் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை மாலையில் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் பைகிராப்ட்ஸ் சாலையில் திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மைதானம் நோக்கி முன்னேறினர்.

போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர் இதனால் திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையில் விடுதலை சிறுத்தைகள் அணியினர் வன்னி அரசு, ஷாநவாஸ் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.

இதனிடையே அண்ணா சாலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர், அவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களை கைது செய்த சில நிமிடங்களில் டிசம்பர் 3 இயக்கத்தினர் போராட்டம் நடத்தி கைதாகினர். பின்னர் எஸ்டிபிஐ அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

5 மணிக்கு மேல் அண்ணா சாலையில் திடீரென திரையுலகினரின் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் ஆயிரக்கணக்கில் போராட்டக்காரர்கள் அண்ணா சாலையில் ஆக்கிரமித்தனர். இதனால் சிறிது நேரத்தில் அண்ணா சாலை ஸ்தம்பித்தது. அண்ணா சாலையின் அனைத்துப் பகுதியிலும் போக்குவரத்து தடைபட்டது.

மே 17 இயக்கத்தினர், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அமைப்பினர் உள்ளிட்டோரும் ஆங்காங்கே கோஷம் எழுப்பினர். பாரதிராஜா, சீமான், தமீமுன் அன்சாரி, இயக்குநர்கள் தங்கர் பச்சான், வி.சேகர், வெற்றிமாறன், ராம், கவுதமன் உள்ளிட்டோர் தலைமையில் ஆவேசமாகத் தொண்டர்கள் வாலாஜா சாலை வழியாக ஆவேசமாக சேப்பாக்கம் மைதானம் நோக்கிச் சென்றனர்.

இதனால் மிகுந்த பதற்றம் ஏற்பட்டது. டி 1 திருவல்லிக்கேணி காவல்நிலையம் அருகே அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். போலீஸார் அதற்கு மேல் அனுமதி இல்லை என மறுத்தனர். இதனால் போராட்டக்காரர்கள் போலீஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர்.

போலீஸார் நடத்திய தடியடியில் இயக்குநர் வெற்றிமாறன் தாக்கப்பட்டார். பின்னர் பாரதிராஜா, சீமான் ஆகியோர் போலீஸ் அதிகாரிகளைக் கண்டித்தனர். நாங்கள் நியாயமான போராட்டம் நடத்தவே வந்தோம் ஏன் வீணாகத் தடியடி நடத்துகிறீர்கள் என்று கேட்டனர்.

பின்னர் கூடுதல் ஆணையர் சாரங்கன் தலைமையில் போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இங்கேயே அமர்ந்து போராட்டம் நடத்தலாம், மைதானம் அருகே செல்ல அனுமதி இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர். ஆனாலும் போரட்டக்காரர்கள் கலையாமல் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் படையின் அனைத்துப் பிரிவுகளும், அதிரடிப்படை போலீஸாரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அதே நேரம் கருணாஸ் தலைமையில் சுமார் 200 தொண்டர்கள் திடீரென வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சேப்பாக்கம் மைதானம் நோக்கிச் செல்ல சாலை மறியலில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், தமீமுன் அன்சாரி, கருணாஸ் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே வீரர்களை அழைத்துவந்த பேருந்தைத் தடுத்து மறியலில் ஈடுபட முயன்ற சிலர் கைது செய்யப்பட்டனர். ஸ்டேடியத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டாலும், அண்ணா சாலை முழுவதும் போக்குவத்து துண்டிக்கப்பட்டதால் ரசிகர்கள் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே இருந்தது.

எப்போதும் மாலை 5 மணிக்கே நிறைந்துவிடும் அரங்கில் ரசிகர்கள் வருவதில் சிரமம், பயம், கட்டுப்பாடு காரணமாக 2 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே மைதானத்துக்குள் அமர்ந்திருந்தனர். சாலையில் ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் உள்ளே செல்ல வரிசையில் நின்றனர்.

கருப்பு உடை அணிந்து வந்தவர்களை அனுமதிக்கவில்லை, மாறாக மைதான நிர்வாகம் சார்பாக சிஎஸ்கே பனியன் வழங்கப்பட்டது. மைதானத்துக்கு வெளியேவும் சிஎஸ்கே பனியன் விற்கப்பட்டது.

6 மணிக்கு மேல் வீரர்கள் மைதானத்துக்குள் வந்து வலைப்பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினர். பதற்றத்துடன் தொடங்கும் ஆட்டத்தில் ரசிகர்கள் கூட்டம் எதிர்ப்பார்த்த அளவு இருக்காது என தெரிகிறது. இதுவரை சாலையில் நடந்த போராட்டம் அடுத்து மைதானத்துக்குள்ளும் தொடருமா என்பது அடுத்து வரும் நிகழ்வுகளில் தெரிய வரும்.