தமிழகத்தில் பா.ஜ.கவால் கால் அல்ல; கையை கூட ஊன்ற முடியாது : மு.க.ஸ்டாலின்..


தமிழகத்தில் பா.ஜ.கவால் கால் அல்ல; கையை கூட ஊன்ற முடியாது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக பிரமுகரின் இல்லத் திருவிழாவில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
அதிமுகவை போல் எடுத்த உடன் முதல்வராக முடியாது. திமுகவில் படிப்படியாகத்தான் வளர முடியும். தமிழகத்தில் இதற்கு முன் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைகளின் தற்போதைய நிலவரம் என்ன? மாநில ஆட்சியை மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சி மிரட்டி, அச்சுறுத்தி எப்படியாவது தமிழ்நாட்டில் காலுன்றும் முயற்சியில் ஈடுபடுவதற்காக திட்டமிட்டு கொண்டிருகிறார்கள். நான் உறுதிப்பட கூறுகிறேன், தமிழகத்தில் பா.ஜ.கவால் கால் அல்ல, கையை கூட இந்த மண்ணில் ஊன்ற முடியாது. அதற்கு தமிழ்நாட்டு மக்கள் சம்மதிக்க மாட்டார்கள்.
எது எப்படி இருந்தாலும் இன்று மாநிலத்தில் ஒரு மதச்சார்பற்ற ஆட்சியை உருவாக்க ஒரு அடித்தளமாக தமிழ்நாட்டில் ஊழலற்ற நேர்மையான ஒரு ஆட்சியை மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் குறித்து சிந்திக்கும் ஒரு இயக்கம் திமுக தான். இது சுயமரியாதை கல்யாணம். அதனால் தான் நமக்கு தெரிந்த, நமக்கு புரிந்த நமது தாய்மொழியில் நடைபெறுகிறது என்றார்.