பேருந்து ஸ்டிரைக் 5-வது நாளாக நீடிப்பு: அரசுக்கு வருவாய் இழப்பு அதிகரிப்பு..

 


அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 5-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு அதிகரித்து வருகிறது.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பெரும்பாலான அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பாமல் 5-வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்கின்றனர். இதனால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.

மாநிலம் முழுவதும் பேருந்துபோக்குவரத்து முடங்கி உள்ளதால் அண்ணா தொழிற்சங்கம் உள்பட அரசு ஆதரவு தொழிற்சங்க தொழிலாளர்களை வைத்தும், தற்காலிக பணியாளர்களை வைத்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே ஓடுவதால் அவற்றில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக உள்ளது.

ஆனாலும் சென்னை மாநகர பஸ்களில் கூட்டம் அதிகம் இல்லை. பேருந்தை நம்பி பலமணி நேரம் காத்திருந்தவர்கள் ஆட்டோ, இரு சக்கர வாகனத்தில் சென்று வருகிறார்கள். இதனால் பேருந்து நிறுத்தங்களில் கூட்டம் இல்லை. ஏராளமான பேர் மின்சார ரெயில், மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர்.

மாநகர போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கினாலும் அதில் போதிய பயணிகள் இல்லாததால் வருமானம் குறைந்து விட்டது. சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தனியார் பஸ்கள் இயங்குவதால் அரசு பேருந்துகளில் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டசபை இன்று தொடங்க உள்ள நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை சட்டசபையில் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.