குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கேரளாவில் 70 லட்சம் பேர் பங்கேற்பு..

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், திரும்பப் பெற வலியுறுத்தியும் கேரள மாநிலத்தில் 620 கி.மீ தொலைவுக்கு மனிதச் சங்கிலி உருவாக்கப்பட்டது.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் உருவாக்கப்பட்ட இந்த மனிதச் சங்கிலி வடக்கு கேரளாவின் காசர்கோடு நகரில் தொடங்கி, தெற்கே களியக்காவிளை வரை உருவாக்கப்பட்டது.

ஏறக்குறைய 60 லட்சம் முதல் 70 லட்சம் மக்கள் வரை இந்த மனிதச் சங்கிலியில் பங்கேற்றார்கள் எனக் கூறப்படுகிறது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, திரும்பப் பெறவலியுறுத்தியது. மேலும், உச்ச நீதிமன்றத்திலும் சிஏஏ சட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது.

திருவனந்தபுரத்தில் இன்று நடந்த போராட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் கன்னம் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

அரசியலமைப்புச் சட்டத்தின் முகவரை வாசிக்கப்பட்டபின் மாலை 4 மணிக்கு மனிதச்சங்கிலி தொடங்கியது. 620 கி.மீ மனிதச் சங்கிலியின் தொடக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எஸ். ராமச்சந்திரன் பிள்ளையும், களியக்காவிளையில் முடியும் இடத்தில் எம்.ஏ.பேபியும் நின்றனர். ஏராளமான பொதுமக்களும், முக்கிய நபர்களும், மாணவர்களும், மாணவிகளும் இந்த மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர்.