நிரவ் மோடியைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சிபிஐ கோரிக்கை

இங்கிலாந்து எல்லைக்குள் இருக்கும் நிரவ் மோடியைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.

இதில், சி.பி.ஐ., பொருளாதார அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் 141 வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர்.

நிரவ் மோடி நிறுவனங்களின் டெபாசிட்டுகள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ரூ.94 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது. நிரவ் மோடி குழுமத்துக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் மதிப்புடைய 21 சொத்துகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரைக் கைது செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமினில் விட முடியாத கைது உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதற்கிடையில், பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள தனது நகைக்கடையின் மாடியில் உள்ள வீட்டில் குடியிருந்த நிரவ் மோடி, அங்கிருந்து பெல்ஜியம் நாட்டுக்கு தப்பியோடி அந்நாட்டின் குடியுரிமை பெற முயற்சித்து வருவதாக தகவல் வெளியானது. இதைதொடர்ந்து, இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் சார்பில் நிரவ் மோடிக்கு எதிராக சிவப்பு நோட்டீஸ் விடப்பட்டது.

ஆனால், நிரவ் இன்னும் பிரிட்டன் நாட்டு எல்லைக்குள் இருப்பதாக அந்நாட்டின் சார்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. பிரிட்டனில் இருக்கும் அவரை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்னும் நோட்டீசை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்தனர்.

வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக இந்த நோட்டீஸ் விரைவில் பிரிட்டன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

CBI has requested Interpol Manchester to detain Nirav Modi in the UK