‘மத்திய, மாநில அரசுகள் பொய்யர்களின் கூடாரம்’: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடல்..

மத்திய, மாநில அரசுகள் பொய்யர்களின் கூடாரமாக விளங்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமையும் என்றும், அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது.

அதற்கு மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள பதிலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை மத்திய அமைச்சரவை மற்றும் மத்திய செலவினங்களுக்கான நிதிக்குழு ஒப்புதல் தரவில்லை என்றும், இதற்காக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அதன் நகலை பதிவிட்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 2 ,000 கோடி ரூபாய் ஒதுக்கியதாகவும், கட்டுமான பணிகள்தான் தொடங்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசின் அமைச்சர்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் இவை அனைத்தையும் பொய் என்பதை உறுதி படுத்தியுள்ளதாகவும், இதன்மூலம் மத்திய, மாநில அரசுகள் பொய்யர்களின் கூடாரம் என்பதை நிரூபித்துள்ளதாகவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.