மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசுகிறார்.

சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எந்த கூட்டணியிலும் இணையாமல், பா.ஜ.க. காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின்கூட்டணிக்கு முயற்சி செய்தது.

இதற்காக தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் சந்திரசேகர ராவ் சென்னை வந்து மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துச் சென்றார்.

தேர்தலுக்கு பின்னர் மாநில அளவில் வலுவான கட்சிகளின் அணியை அமைக்க சந்திரசேகர ராவ் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று பிற்பகல் சென்னை வரும் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசுகிறார்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்ற போதிலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய நிலவரம் குறித்து ஸ்டாலினுடன் சந்திரசேகர ராவ் விவாதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.