சந்திரயான் 2: விண்வெளித் திட்டங்கள் சாமானிய மக்களுக்கு ஏன் முக்கியம்?

சாதாரண இந்திய குடிமகன் சந்திரயான்-2 பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

வறுமையில் சிக்கி தவிக்கின்ற, அறிவியலை கற்றுக் கொள்ளாத பொது மக்களுக்கு இவ்வளவு பெரிய விண்வெளி திட்டம் பிரமிக்கவைக்கும் கதை போல தோன்றலாம்.

ராக்கெட், செயற்கைக்கோள், ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் போன்ற சொற்கள் இவர்களுக்கு அந்நியமானவை.

இதற்கெல்லாம் நாம் விடை தேடும் முன்னர், பிரிட்டன் காலனியாதிக்கதில் தனது செல்வங்களை எல்லாம் இழந்துவிட்ட நாடு ஒன்று, விண்வெளி அறிவியலில் செலவு செய்ய முடிவு செய்தது ஏன் என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.

விக்ரம் சராபாயும், இஸ்ரோவோடு தொடர்புடைய எல்லா விஞ்ஞானிகளும் தொடக்க காலக்கட்டத்தில் தீவிர விமர்சனங்களை எதிர்கொண்டனர். இத்தகைய கேள்விகளுக்கு அவர்கள் தொடர்ந்து விடையளிக்க வேண்டி இருந்தது.

சமூகத்தின் உண்மையான பிரச்சனைகளுக்கு உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு எந்தவொரு நாட்டுக்கும் அடுத்தப்படியாக நாம் இருக்கக்கூடாது என்று அப்போதைய அரசியல் தலைவர்களை விக்ரம் சாராபாயால் சம்மதிக்க வைக்க முடிந்தது.

பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடுகளோடு விண்வெளி, பிற கிரகங்கள், விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டம் ஆகிய ஆய்வுகளில் போட்டியிடுவது இந்திய விண்வெளி திட்டத்தின் நோக்கமல்ல என்ற தெளிவும் விக்ரம் சராபாயிடம் இருந்தது.

எனவே, ராணுவத்தில் பயன்படுத்தி கொள்வதற்காக அன்று, தனித்தன்மையான விண்வெளி திட்டத்தை கொண்டுள்ள நாடாக இருக்கின்றோம். அமெரிக்காவில், ஐரோப்பாவில் மற்றும் சோவியத் ரஷ்யாவில் பனிப்போரால் தூண்டப்பட்ட விண்வெளி ஆய்வுக்கு மாறான மக்களின் திட்டமாக இது இருந்தது.

இந்த நோக்கம் மாறிவிட்டதா? நிலவையும், கிரகங்களையும் ஆய்வு செய்வதன் மூலம் மனிதரின் மற்றும் சமூகத்தின் உண்மையான பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண முடியும் என்பதுதான் ஒருவர் எழுப்புகின்ற இயல்பான கேள்வி

அறிவியில் ஆய்வு என்று அழைக்கப்படுவதில் இயல்பாகவே இதற்கு விடை உள்ளது.

பொதுவாக அறிவியல், குறிப்பாக விண்வெளி ஆய்வில், மனித குலத்தின் பரிணாமத்திற்கும், வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கின்ற அறியாத எல்லைகளில் ஆய்வு செய்வதன் மூலம் அறிவு பெருகுகிறது.

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளை பின்பற்றுவது அல்லது அவற்றோடு போட்டியிடுவதற்கு எதிராக சாராபாய் விளங்கினார் என்பது தெளிவாகிறது.

1960களில் கேரளா மாநிலத்தில் தேவாலயம் ஒன்று அமைந்துள்ள தும்பாவில் இருந்து பொம்மை போன்ற ராக்கெட்டுகளை தயாரித்து, விண்ணில் செலுத்தாமல் இருந்திருந்தால், நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் விண்வெளிப் பயணத் திட்டத்தை மேற்கொள்ளும் திறனை இந்தியா இன்று பெற்றிருக்காது என்பதை நாம் மறந்துவிட கூடாது.

முன்னரே எச்சரிக்கை வழங்கும் அமைப்புகள் மூலம் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றும், பயிர்களையும், காடுகளையும் நிர்வகிக்க உதவும், தேசிய தகவல் தொடர்பை வலுவாக்கும் செயற்கைக்கோளை, என்றாவது ஒரு நாள் இந்தியா சொந்தமாக கொண்டிருக்கும் என கடந்தகால விமர்சகர்களை யாரும் சம்மதிக்க வைத்திருக்க முடியாது

சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்புக்காக வளர்ந்த நாடுகளின் கருணையையே நம்பியிருக்கின்ற பிற நாடுகளை போல நாமும் இருந்திருப்போம்.

இஸ்ரோ, சிஎஸ்ஐஆர், ஐஏஆர்ஐ, அணு சக்தி ஆணையம், மற்றும் டிஆர்டிஒ ஆகியவை கடந்த 70 ஆண்டுகளில் கண்டறிந்தவை எல்லாம் 1950 மற்றும் 60களில் நல்ல அறிவியில் புனைக்கதைகள் என்ற நம்பப்பட்டவையே.

சூறாவளி பற்றி செயற்கைக்கோள் வழங்கும் தரவுகளின் அடிப்படையில், நமது கடலோர பகுதிகளில் எங்கு பாதிப்பு ஏற்பட போகிறது, பேரழிவு ஏற்பட போகிறது, மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பப்படுவார்கள், வளருகின்ற ஏழையான ஒரு நாட்டில் மனித உயிர்கள் காப்பாற்றப்படும் என்பதை எல்லாம் யார்தான் கணித்திருக்க முடியும்.

1000-க்கு மேலான தொலைக்காட்சி சேனல்களை இந்தியா கொண்டிருக்கும் என்பதும், அவற்றில் பெரும்பாலானவை தகவல் தொடர்புக்கு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என்பதும் கற்பனைக்கு எட்டாதவையாக இருந்தன. இவ்வாறு பலவற்றை பட்டியலிடலாம்.

சாதாரண குடிமக்கள் பொதுவாக அறிவியலிலும், குறிப்பாக சந்திரயான் 2-ல் ஈடுபாடு காட்ட வேண்டும் என்று கூறினால், முடிவே பெறாத விவாதப்போர்தான் ஏற்படும்.

இங்கே சில காரணங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

முதலில், அறிவியலின் வரலாறு எடுத்துக்காட்டுகள் நிறைந்தது. பிரபஞ்சம், சூரிய குடும்பம் மற்றும் நம்மை பற்றிய புரிதல்கள் கண்டுபிடிப்புகள் நடைபெறும்போது மாறியுள்ளன.

நமது வாழ்வும், சமூக உறவுகளும் அறிவியல் அறிவால் தொடர்ந்து மாறிவந்துள்ளன. ஆனால், இன்றைய உலகில் சமூக ஆதரவு மூலம் எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்பையும் மேற்கொள்ள முடியாது.

கடினமான சொற்களால் அறிவியல் விளக்கம் உள்ளதால், பொதுப்பார்வையில் இருந்து மறைந்தே உள்ளது. இத்தகைய உயர் சாத்திய நிகழ்வுகள் தேசிய அளவில் விவாதத்தை தோற்றுவிப்பதோடு, பொது மக்களின் அறிவியல் விழிப்புணர்வை அதிகரிக்கிறது. இது அறிவியல் சமூகத்திற்கும், குடிமக்களுக்கும் இடையில் நம்பிக்கையை தோற்றுவிக்கும்.

விஞ்ஞானிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நாடு தெரிந்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால், மனிதரின் மற்றும் சமூகத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அவர்களிடம் சொல்ல வேணடும்.

சந்திரயான்-2 போன்ற பணித்திட்டங்களை மேற்கொள்வது அறிவியல் சமூகத்தின் முன்னேற்றத்தை காட்டுகின்ற அடையாளமாகவும் இருப்பதோடு, நாட்டின் அறிவியல் நிலைமையையும் பிரதிபலிக்கிறது.

நிலவில் விண்கலன் சுமூகமாக தரையிறங்குவது தேசத்திற்கே பெருமை என்பதையும், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதை நோக்கமாக கொண்டிருப்பது எவ்வளவு முக்கியமானது என்பதையும் பொது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

பூமியில் நிலவுவதைவிட ஈர்ப்பு விசையும், வானிலையும் நிலவில் மிகவும் வித்தியாசமானவை.

பூமியில் சுமூகமாக தரையிறங்கும் தொழில்நுட்பத்தில் நாம் ஏற்கெனவே நிபுணத்துவம் அடைந்துவிட்டோம். வேகத்தை அதிகரிக்க, குறைக்க மற்றும் வழிநடத்தி செல்ல நாம் காற்றை பயன்படுத்துகிறோம்.

எனவே, நிலவில் சுமூகமாக தரையிறங்குவதற்கும், வேகத்தை குறைப்பதற்கும், லேண்டர் தரையிறங்க சரியான இடத்தை அனுகி செல்லவும் எரிபொருள் அவசியம்.

இந்த செயல்வழிக்கு அசாதாரணமான துல்லியதன்மை தேவைப்படுகிறது. சந்திரயான்-2 மூலம் இந்த துல்லியதன்மையை சாதிக்கின்ற நான்காவது நாடாக இந்தியா மாறும்.

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குவது இரண்டு காரணங்களால் முக்கியத்துவம் பெறுகிறது.

முதலாவது, நிலவின் மேற்பரப்பிலுள்ள மண் வடதுவருவ பகுதியில் உள்ளதை போன்று தென்துருவப்பகுதியிலும் உள்ளதா இல்லையா என்பதை நமக்கு தெரிவிக்கும்.

சூரிய குடும்ப தோற்றத்தை பற்றிய நமது புரிதலில் தீவிர மாற்றம் இதனால் ஏற்படும்.

இன்னொரு காரணம், அங்கு நீர் இருந்தால், இந்தப் பிரதேசத்தில் பயன்படுத்தக்கூடிய அளவில் நீர் உள்ளதா என்பதை நாம் அறிய விரும்புகின்றோம்.

நிலவில் நீர் உள்ளதா என்கிற கேள்வி விஞ்ஞானிகளை நீண்டகாலமாக சிந்திக்க வைத்திருக்கும் ஒன்றாகும். அங்கு போதிய நீர் இருந்தால், நிலவில் மக்கள் வாழ்வதற்கான காலனிகளை அமைக்கவும், எதிர்காலத்தில் மிகவும் மலிவான விண்கல பயணத்திட்டங்களை உருவாக்கவும் உதவும்.
நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், தெளிவுகள் இன்னும் ஆய்வு செய்ய வேண்டிதாகவே கருதப்படுகிறது.

சந்திரயான்-2 பணித்திட்டம் இந்தியாவுக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் திட்டமாகும். இதுவரை விண்வெளி தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் அடைவதில் இஸ்ரோ கவனம் செலுத்தி வந்தது.

விண்வெளி அறிவியலில் ஒரு திருப்புமுனை மாற்றத்தை ஏற்படுத்தும் பணித்திட்டமாக சந்திரயான்-2 அமைகிறது.

இஸ்ரோவின் எல்லைக்கு அப்பாலும் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள் உள்பட பல நிறுவனங்களின் ஈடுபாடு கொள்வதை இந்த திருப்புமுனை மாற்றம் உறுதிப்படுத்தும்.

மக்களின் சக்திகளை திரட்டும் சாராபாயின் கனவு இப்போது தொடங்கி அறிவியல் சமூகத்தின் கணிசமான பகுதியை உள்ளடக்குவதாக மாறும்.

கடைசியாக ஆனால் முக்கியமானதாக, இத்தகைய பணித்திட்டங்கள் சாதாரண மக்களின் செல்வத்தால் நிதி ஆதரவு பெறுகின்றன.

இந்த செல்வம் எதிர்கால தலைமுறைகளுக்கு பயன்படும் விதமாக செலவழிக்கப்பட்டதா என்று அறியும் உரிமை இந்த மக்களுக்கு உள்ளது.

நாம் நினைத்தே பார்க்காத அறிவு பெருங்கடலை எதிர்கால தலைமுறையினர் சென்றடைய சந்திரயான்-2 தூண்டுதல் அளிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

நிலவை அல்லது செவ்வாய் கிரகத்தை காலனியாக்கி கொள்ளும் முதல் நாடாக இந்தியாவை உருவாக்குவதை அவர்கள் நோக்கமாக கொள்ளலாம்.

நன்றி
பிபிசி தமிழ் இணையதளம்