சென்னையில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை..

சென்னையில் விடிய விடிய பலத்த மழை பெய்துள்ளது. திருவண்ணாமலை, தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இரண்டாவது நாளாக நேற்று இரவு ராயப்பேட்டை, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில்

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. புறநகர்ப் பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது.

உதகையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, வேங்கிக்கால், வேட்டவலம், கீழ்பென்னாத்தூர் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்சி அடைந்தனர். தீர்த்தமலை,ஆண்டியூர்,கோட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை பெய்தது.

இதனிடையே, தமிழகத்தில் நாளை பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், விருதுநகர்,

வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.