சென்னை குப்பைக்கிடங்கில் உடல்பாகங்கள் : கொலையான பெண் அடையாளம் கண்டுபிடிப்பு..

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள குப்பை கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் துண்டு துண்டாக கைப்பற்றப்பட்ட வழக்கில் துப்பு துலங்கியுள்ளது.

மனைவியை கொடூரமாக கொலை செய்து உடல் பாகங்களை வீசி எறிந்த சினிமா இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள குப்பைக் கிடங்கில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி ஒரு பெண்ணின் வலது கை மற்றும் 2 கால்கள் கண்டெடுக்கப்பட்டன. வேறு எந்த உடல் பாகங்களும் கிடைக்கவில்லை.

பெண்ணின் கையில் இருந்த டாட்டூவை வைத்து, அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதும், திருமணமான இவர், கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இவரது கணவர் பாலகிருஷ்ணன், கடந்த 2010ஆம் ஆண்டு காதல் இலவசம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் மனைவி சந்தியா பெயரிலேயே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அந்த படத்தை பாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

இந்த படம் ஓடாத காரணத்தினால் வாய்ப்புகள் இல்லாமல், நண்பர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் கணவன் மனைவி இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சமயத்தில் தமது மனைவி வேறு ஒரு நபருடன் பழகுவதை அறிந்த பாலகிருஷ்ணன், சென்னை ஜாபர்கான்பேட்டையில் வைத்து சந்தியாவை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் சந்தியாவை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை வீசி எறிந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின் பேரில் ஜாபர்கான்பேட்டை பகுதியில் காசி திரையரங்கம் அருகே, சந்தியாவின் மற்ற உடல் பாகங்களை தேடி வருகின்றனர்.

இந்த வழக்கில் பெண்ணின் ஒரு கை மற்றும் கால்கள் மட்டுமே கிடைத்த நிலையில் மிக சிறப்பாக செயல்பட்டு போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் துப்பு துலக்கியது எப்படி, பெண்ணை அடையாளம் கண்டது எப்படி என்கிற தகவலை விரைவில் வெளியிட உள்ளனர்.