சென்னையில் வழக்கத்தை விட 93% அதிக மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..

வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல் இன்றுவரை சென்னையில் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட 93 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் தமிழகம் முழுதும் 8 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இதோ துவங்கும் அதோ துவங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டு கடைசியில் கடந்த மாதம் 27-ம் தேதி துவங்கியது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெருமழைக்கு பின் சென்னையில் வடகிழக்கு பருவமழை என்றாலே பொதுமக்கள் பயப்படும் நிலை உருவானது.
ஆனால் கடந்த ஆண்டு கடந்த 140 ஆண்டுகள் இல்லாத வறட்சி ஏற்பட்டு மழை பொய்த்துப் போனது. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் தென்மேற்குப் பருவமழை காரணமாக தென் மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்தாலும் சென்னையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரிய அளவில் மழை இல்லை.
ஆனால் வடகிழக்கு பருவமழை துவங்கிய ஒரு மாத காலத்தில் சென்னையில் இயல்பான அளவை விட 93 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
”வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல், அதாவது வானிலை ஆய்வு மைய கணக்கீட்டின் படி வடகிழக்கு பருவமழை அக்.1 முதல் டிசம்பர் வரை கணக்கிடப்படும். அதன்படி அக்டோபர் 1 முதல் நவம்பர் 4 வரை தமிழகம் முழுதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மழை அளவு 21 சதவீதம். ஆனால் பெய்தது 19 சதவீதம்.
அதாவது எதிர்ப்பார்க்கப்பட்டதை விட 8 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இன்னும் காலம் இருப்பதால் பிரச்சினை இல்லை. ஆனால் சென்னையில் எதிர்ப்பார்க்கப்பட்ட மழை அளவு 32 செ.மீ பெய்தது 62.3 செ.மீ. இது எதிர்ப்பார்க்கப்பட்டதை விட 93 சதவீதம் அதிகம் ஆகும்”.
இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.
இரண்டு மூன்று நாட்கள் மழையில் எதிர்பார்க்கப்பட்டதை விட 93 சதவீதம் அதிக அளவில் மழை பெய்தாலும் நீர் நிலைகள் 20 சதவீதம் வரைதான் நிரம்பி உள்ளது. சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி சூழ்ந்து வீணானது தான் மிச்சம்.