சீன இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் 10 சதவீதம் வரி : டிரம்ப் அறிவிப்பு..

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது.

சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் உலகளவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த மாதம்கூட, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது.

இந்த நிலையில், மேலும் 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளது அமெரிக்கா.

இதற்கான அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 24-ம் தேதி முதல் இந்த புதிய வரிவிதிப்பு அமலுக்கு வரும் எனவும்,

ஜனவரியில் இருந்து வரிவிதிப்பு 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

மேலும், சீனா தனது நியாயமற்ற வர்த்தகத்தை தொடர்ந்து பின்பற்றுவதாகவும் தெரிவித்த டிரம்ப், இந்த வரிவிதிப்புக்கு பதில் நடவடிக்கையாக எங்களின் விவசாய பொருட்கள்,

தொழில்பொருட்கள் ஆகியவற்றுக்கு சீனாவும் கூடுதல் வரி விதிக்குமேயானால், நாங்கள் மூன்றாவது கட்டமாக சீன பொருட்களுக்கு வரியை கூட்டுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

கூடுதல் வரி விதிப்பு பட்டியலில் இணைய தொழில்நுட்ப தயாரிப்புகள், மின்னணு பொருட்கள், நுகர்வோர் பயன்பாட்டுப்பொருட்கள், சீன கடல் உணவுகள்,

மரச்சாமான்கள், விளக்குகள், டயர்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சைக்கிள்கள், கார் இருக்கைகள் இடம் பெற்றுள்ளன.