குடியுரிமை சட்டத் திருத்த மசோதா : மாநிலங்களவையில் ப.சிதம்பரம் கேள்வி..

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் கிறிஸ்தவர்களை சேர்த்துவிட்டு இஸ்லாமியர்களை நீக்கியது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடும் எதிர்ப்பை மீறி, மக்களவையில் நிறைவேறிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, மாநிலங்களவையில் இன்று புதன்கிழமை (டிச.11) அறிமுகம் செய்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சிகள், கிறிஸ்தவா்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளைக் குறைக்கும் வகையில் கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் பல மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு திங்கள்கிழமை நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினா்களும், எதிராக 80 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.

இந்த மசோதாவை மக்களவைவை போல், மாநிலங்களவையிலும் இன்று புதன்கிழமை(டிச.11) அறிமுகம் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

இந்நிலையில், மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ப.சிதம்பரம் பேசுகையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் இந்த சட்டத்தை நிறைவேற்ற நினைப்பது மோசமான செயல் என்றார்.

மேலும், குடியுரிமை மசோதா சட்ட நிபுணர்களின் ஆலோசனை பெறப்படாமல் உருவாக்கப்பட்டுள்ளது. மசோதா குறித்து சட்ட அமைச்சரும், தலைமை வழக்குறைஞரிடம் கருத்து கேட்டீர்களா?, கிறிஸ்தவர்களை சேர்த்துவிட்டு இஸ்லாமியர்களை நீக்கியது ஏன்?, எப்படி இஸ்லாமியர்களையும் பிற மதத்தினரையும் அடையாளம் காண்பீர்கள்?,இலங்கை இந்துக்களை சேர்க்காதது ஏன் ? பூட்டான் இந்துக்களை சேர்த்தது ஏன்?,

மதரீதியாக துன்புறுத்தப்படுபவர்களுக்கு மட்டும் குடியுரிமை என இந்த சட்டத்திருத்தத்தில் குறிப்பிட்டிருப்பது ஏன்?, இந்த கேள்விகளுக்கு பொறுப்பேற்று பதில் சொல்லப்போவது யார்?, நன்மை தீமைகளுக்கு பொறுப்பாளி யார்? என சரமாரியாக கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம், குடியுரிமை மசோதா, அரசியல் சாதன விதிகளை மீறிய மசோதா என்றும், நீதிமன்றங்கள் சட்டவிரோதமானது என்று அறிவிக்கும் என்றவர் அரசு அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும் என கூறினார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!