கலைஞருக்கு பாரத ரத்னா வழங்குவது பற்றி ஆலோசிக்க மத்திய அரசு குழு: இல.கணேசன்

மறைந்த கலைஞருக்கு பாரத ரத்னா வழங்குவது பற்றி பரிசீலனை செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குவது பற்றி மத்திய அரசுதான் முடிவு செய்யும் என அவர் கூறினார்.

நேற்று முன்தினம் கலைஞருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்பி திருச்சி சிவா மாநிலங்களவையில் பேசினார்.

”80 ஆண்டு பொது வாழ்க்கையில் 50 ஆண்டு காலம் திமுகவின் தலைவராக இருந்தவர் கலைஞர். அடிதட்டு மக்கள் வாழ்க்கை மேம்பட பெரும் பங்காற்றியவர். சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்திக்காதவர். 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கலை, இலக்கியம், அரசியல் என பன்முக தன்மை கொண்ட தலைவர் கலைஞர். கலைஞரின் இழப்பு வரலாற்றுப் பேரிழப்பு. கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என திருச்சி சிவா  கோரினார்.

இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் கலைஞருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Committee Formed to review about bharatha Rathna to Kalaingar