அதிமுக கூட்டணி தொகுதி ஒதுக்கீடு: அறிவிப்பதில் தாமதம் ஏன்?

அதிமுக கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து கொள்வதில்  இழுபறி நீடிப்பதால், இறுதி முடிவை அறிவிப்பதில் தாமதமாகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக-5, பாமக- 7, தேமுதிக-4, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒன்று என 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. யார், யாருக்கு எந்த தொகுதி என்பது குறித்து முடிவெடுக்க கடந்த 13-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. சென்னையில், தென்சென்னையை மட்டும் வைத்துக் கொண்டு, வடசென்னையை தேமுதிகவுக்கும், மத்திய சென்னையை பாமகவுக்கும் அதிமுக ஒதுக்கியது. இந்த தொகுதிகளை விரும்பாத பாமகவும், தேமுதிகவும், கிருஷ்ணகிரி தொகுதியை குறிவைத்தன. அதிமுகவோ கிருஷ்ணகிரியை தர முன்வரவில்லை.

இதையடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேற்று முன்தினம் சந்தித்து கிருஷ்ணகிரி தொகுதி தொடர்பாக ஆலோசனை நடத்தி, இறுதி செய்தனர்.

அதேபோல் அதிமுக- பாஜக இடையே தென்சென்னை, ராமநாதபுரம் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் உருவானது. தென்சென்னையை விட்டுத் தராத அதிமுக, நீலகிரியை பாஜகவுக்கு தருவதாக கூறியது. அதை ஏற்காத பாஜக, ராமநாதபுரத்தை கோரியது. வேறு வழியின்றி ராமநாதபுரத்தை விட்டுக் கொடுக்க அதிமுக முன்வந்தது. அதன்படி பாஜகவுக்கு கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே, ராமநாதபுரம் தொகுதியின் தற்போதைய அதிமுக எம்பி., அன்வர்ராஜா உள்ளிட்டோர், அங்கு அதிமுகதான் போட்டியிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினர். இதனால், ராமநாதபுரத்தை மீண்டும் தங்களுக்கே வழங்க வேண்டும் என்றுபாஜகவிடம் அதிமுக கோரியுள்ளதாக கூறப்படுகிறது. ராமநாதபுரத்தை விட்டுக் கொடுத்தால், அதற்கு பதில் கொங்கு மண்டலத்தில் வேறு தொகுதி ஒதுக்கும்படி பாஜக கேட்டுவருகிறது.

இதுதொடர்பாக அதிமுக – பாஜக இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து வருவதால்தான் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்து வந்திருக்கிறார்.

இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் அதிமுக – பாஜக இடையே இறுதி முடிவு எட்டப்பட்டு, தொகுதிகள் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.