மக்களை பிரித்தாளும் அரசியலையே காங்., மேற்கொள்கிறது : பிரதமர் மோடி குற்றம்சாட்டு


மக்களை மதம் மற்றும் சாதி ரீதியாக பிரித்தாளும் அரசியலையே காங்கிரஸ் மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, பரூச்சில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சி குஜராத் வளர்ச்சிக்காக எதையுமே செய்ததில்லை என்று கூறிய பிரதமர் மோடி, நர்மதா அணையைக் கட்ட கடைசிவரை முயற்சிக்கவில்லை எனவும் சாடினார்.

உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமேதியிலேயே தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டிய மோடி, குஜராத்திலும் அக்கட்சி படுதோல்வியைச் சந்திக்கும் என்றார்.

சாதி, மத மோதல்களைத் தூண்டி, ஒரு பிரிவினருடன் மற்றொரு தரப்பினரை மோதவிட்டு, அதன் மூலம் காங்கிரஸ் கட்சி தன்னை வளர்த்துக் கொள்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

சொந்தச் சகோதரர்களாக வாழும் மக்களிடையே பிரிவினை எனும் பெரும் சுவரை எழுப்ப காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் மோடி விமர்சித்தார்.