காங்., தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் சோனியா காந்தி…

காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்பு தற்போது அடுத்தக் கட்டத்தினை நோக்கி முன்னேறியுள்ளது. முன்னதாக அக்கட்சியின் 20 க்கும் மேற்பட்ட உயர்மட்ட தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றினை எழுதியிருந்தனர்.

இந்நிலையில் சோனியா காந்தி தற்காலிகமாக பொறுப்பேற்றிருந்த இடைக்கால தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கபில் சிபல், சஷி தரூர், குலாம் நபி ஆசாத், பிருத்விராஜ் சவான், விவேக் தங்கா மற்றும் ஆனந்த் சர்மா போன்ற மூத்த தலைவர்கள் கையெழுத்திட்ட இந்த கடிதத்தில் கட்சியின் தலைமை குறித்து கருத்துக்களை தெரிவித்திருந்தாக சொல்லப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு தற்போது இளைஞர்கள் மத்தியில் உள்ள பெரும்பான்மை ஆதரவினை சுட்டிக்காட்டி, காங்கிரஸில் முழுநேர அரசியல்வாதி தலைமையையும் வெளிப்படைத்தன்மை கொண்ட தலைமைக்கான அவசியத்தையும் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், திறமையான தலைமையையும், களத்தில் செயலாற்றக்கூடிய தலைமைக்கான அவசியம் குறித்தும் அவர்கள் இக்கடிதத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள தலைவர்கள், சோனியா, ராகுல் காந்தி தலைமையின் மீது விமர்சனம் ஏதும் இல்லையென்றும், ஆனால் காங்கிரஸ் கட்சியை அதன் நிர்வாகத்திலும் பாணியிலும் முழுமையாக மாற்றியமைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கட்சி மீது பிடிப்பினை இழக்கும் இளைஞர்கள், கூட்டு தலைமை, நேர்மையான சுயபரிசீலனை போன்றவற்றை இக்கடிதம் வலியுறுத்தியுள்ளது. அதிகார பரவலாக்கத்தின் மறுசீரமைப்பு ஆகியவற்றையும் இக்கடிதம் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.