கரோனா இன்னும் சமூக பரவலாக மாறவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

தமிழகத்தில் கரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லையென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 127 கோடி ரூபாய் மதிப்பில், 750 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பயன்பாட்டுக்கு திறந்து வைத்து பார்வையிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான வசதியுடன் இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. உயிர் இழப்பை தடுக்கும் நோக்கில் இந்த சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டு உள்ளது என்றார்.

தமிழகத்தில் 57.89 % பேர் குணமடைந்து உள்ளதாகவும், சென்னையில் அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு மூலம் படிப்படியாக தொற்று குறைந்து வருகிறது என்றார்.

கொரோனா நோய் உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கிறது. மக்கள் தான் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முழுக்க முழுக்க மக்கள் கையில் தான் இருக்கிறது. அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நோயைக் கட்டுப்படுத்த முடியும்’ என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், சமூக பரவல் இருக்கிறதா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என்றும், சமூக பரவல் இருந்தால் நீங்கள் யாரும் இங்கு இருக்க முடியாது.

வாழ்வாதாரம் கருதி ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டது. நோய் பரவலையும் தடுக்க வேண்டும், வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும். எனவே, ஊரடங்கு மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது’ என்று தெரிவித்தார்.