கால்நடை தீவன ஊழல்: லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை

பீகாரில் நடைபெற்ற கால்நடை தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
பீகாரில் நடைபெற்ற கால்நடை தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் சிலர் மீது ரூ.89.27 லட்சம் கால்நடை தீவன ஊழல் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி சிவபால் சிங், லாலு பிரசாத் உள்பட 16 பேர் குற்றவாளி என 23-12-2017 அன்று தீர்ப்பளித்தார்.

அவருக்கான தண்டனை விவரம் கடந்த 3-ந்தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அன்று வழங்கப்படவில்லை. மறுநாளைக்கு (நேற்று முன்தினம்) ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் லாலு பிரசாத்தின் ஆதரவாளர்கள், நீதிபதிக்கு தொலைபேசி வழியாக மிரட்டல் விடுத்ததன் காரணமாக நேற்று முன்தினமும் தண்டனை விபரம் அறிவிப்பது ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருந்த 11 பேரின் தண்டனைக்கான வாதம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து நீதிபதி சிவபால் சிங் இன்று மாலை 4 மணியளவில் சுமார் 2400 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வாசித்தார். தீர்ப்பின்போது சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பிரன்சிங் வழியாக லாலு பிரசாத் யாதவும் கோர்ட்டில் ஆஜரானார்.

முதல் குற்றவாளி லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தவிர கால்நடை தீவன ஊழல் தொடர்பாக மற்றொரு வழக்கில் 30-9-2013 அன்று லாலு பிரசாத் யாதவுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர் இரண்டரை மாத சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமினில் விடுதலையாகி அந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

இதுதவிர தற்போது ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் லாலு உள்பட சிலர் மீது கால்நடை தீவன ஊழல் தொடர்பாக மேலும் இரு வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.