கச்சா எண்ணெய் விலை 22% குறைந்தும் பெட்ரோல் விலை குறையாதது ஏன்?: ராமதாஸ் கேள்வி..

கச்சா எண்ணெய் விலை கடந்த அக்டோபர் 3-ம் தேதி பீப்பாய்க்கு 77.96 அமெரிக்க டாலர் என்ற உச்சக்கட்டத்தில் இருந்தது. இப்போது அது 60.13 டாலர் என்ற அளவுக்கு குறைந்துள்ளது என்கிறார் ராமதாஸ்.

கச்சா எண்ணெய் விலை சுமார் 22 % அளவு குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

உலக சந்தையில் கடந்த சில மாதங்களாக ஏறுமுகத்தில் இருந்த கச்சா எண்ணெய் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு ஒரு பீப்பாய் 60.13 டாலர் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது.

ஆனால், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு இணையாக நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

நடப்பாண்டில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த அக்டோபர் 3-ம் தேதி பீப்பாய்க்கு 77.96 அமெரிக்க டாலர் என்ற உச்சக்கட்டத்தில் இருந்தது.

இப்போது அது 60.13 டாலர் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இது 22.87% வீழ்ச்சி ஆகும். கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் தான் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பதால்,

அவற்றின் விலைகளும் அக்டோபரில் இருந்ததை விட சுமார் 22% குறைக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.19.34 குறைந்து ரூ.67.84 ஆக இருக்க வேண்டும்.

அதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.18.20 குறைந்து ரூ.61.37- ஆக விற்கப்பட வேண்டும்.

ஆனால், சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 80.90, டீசல் ரூ.76.72 என்ற விலைக்கு விற்கப்படுகிறது.

அதாவது 22.87% குறைய வேண்டிய பெட்ரோல், டீசல் விலைகள் முறையே 7.20%, 3.66% என்ற அளவில் தான் குறைந்துள்ளன.

இது ஏற்றுக்கொள்ள முடியாத விலை நிர்ணயமாகும்.

உலக சந்தையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தேதி கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 60 டாலராக இருந்தது.

கச்சா எண்ணெயின் இப்போதைய விலையும், கடந்த ஆண்டு நவம்பர் முதல் தேதி விலையும் ஒன்றாகும்.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.65 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.60.79 ஆகவும் இருந்தது.

ஆனால், இன்றைய சந்தை விலை முறையே ரூ. 80.90, டீசல் ரூ.76.72 உள்ளது. ஆக எந்த வகையில் பார்த்தாலும்

இயல்பாக விற்பனை செய்ய வேண்டிய விலையை விட பெட்ரோல் லிட்டருக்கு 13.04 ரூபாயும், டீசல் விலை 15.93 ரூபாயும் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இது மிகப்பெரிய கொள்ளையல்லவா?

பெட்ரோல் மீது ஏற்கனவே 118% வரி விதிக்கப்படுகிறது. அதற்குப் பிறகும் பெட்ரோல் விலையில் 13.04 ரூபாயும், டீசல் விலையில் 15.93 ரூபாயும் மறைமுகமாக உயர்த்தி விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம்?

இந்தத் தொகை நுகர்வோருக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு அந்தத் தொகை கிடைக்கவில்லை.

நுகர்வோருக்கு கிடைக்கவில்லை என்றால் அந்தத் தொகை வரியாக மத்திய, மாநில அரசுகளுக்கு செல்ல வேண்டும்.

ஆனால், அப்படியும் அரசுகளுக்கு செல்லவில்லை. மாறாக, இவை எண்ணெய் நிறுவனங்களின் கருவூலத்தில் எந்தக் கணக்கிலும் இல்லாமல் சேருகின்றன.

மத்திய அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இருந்தால் கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளும் குறைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.