கடலூரில் அதிகார வரம்பை மீறும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்…


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடலூரில் இன்று ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுவாக அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மட்டுமே ஆய்வுக் கூட்டத்தை நடத்துவர். ஆனால் ஆளுநரே நேரடியாக அதிகாரிகளை அணுகியதால் தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வருடம் முழுவதும் ஆய்வு செய்ய உள்ளதாக பன்வாரிலால் புரோகித் கூறினார். ஆனால், ஆளுநரின் செயல் மாநில சுயாட்சியை பறிக்கும் விதமாக இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடலூர் வந்தடைந்தார். அங்கு பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தை கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் தொடங்கி வைக்கிறார். பிறகு மாவட்டத்தின் முக்கிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிகார வரம்பை மீறி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடலூரில் இன்று ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆளுநர் கடலூரில் இருந்து செல்லும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். ஆளுநர் செல்லும் வழியில் கருப்புக் கொடி காண்பித்து மறியல் போராட்டத்திலும் திமுக, விசிக ஈடுபட்டுள்ளதால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.