கடலூர் துறைமுகத்தை நோக்கி வந்த பிரம்மாண்ட மர்ம கப்பலால் பரபரப்பு..


கடலூர் துறைமுகப் பகுதியை நோக்கி பிரம்மாண்டமான கப்பல் ஒன்று வந்ததையடுத்து பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

நேற்று காலை வந்த இந்தக் கப்பல் துறைமுகத்திலிருந்து நீண்ட தூரத்தில் நின்றது.

கடலூர்-நாகப்பட்டிணம் வரை உள்ள நிலம் மற்றும் கடல் பகுதிகளில் பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடலூர், நாகப்பட்டிணம் மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும் கடல் வளம் முற்றிலும் அழிக்கப்படும் என்று விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கடலூரில் இந்தப் பிரம்மாண்டக் கப்பல் வந்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைப்பதற்கான பணிகளுக்கு வந்த கப்பல் இது என்று மக்கள் நினைத்தனர்.

துறைமுக அதிகாரிகள் இதுபற்றி கூறும்போது, காலையிலிருந்தே இந்தக் கப்பல் நின்று கொண்டிருக்கிறது. துறைமுகத்துக்குள் வர தங்களிடம் அனுமதி பெற வேண்டுமென்றும் ஆனால் அனுமதி பெறாததால் அங்கேயே நிற்கிறது என்றும் அந்தக் கப்பல் எங்கிருந்து வந்தது எதற்காக வந்தது போன்ற விவரங்கள் தெரியவில்லை என்று தனியார் செய்திப் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளனர்.