டெல்லியில் எதிர்கட்சிகளின் மெகா கூட்டணி: 21 கட்சித் தலைவர்கள் பங்கேற்பு..

பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியாக டெல்லியில் 21 கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை கூடி ஆலோசனை நடத்தினர்.

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய குஷ்வாஹா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அதேசமயம் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பங்கேற்கவில்லை.

நாடுதழுவிய அளவில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னெடுத்து வருகிறார்.

காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ராஷ்டீரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு,

ஆம்ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, சரத் யாதவின் மதச்சார்பற்ற லோக் தந்திரிக் ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்தார்.

நாளை 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இதுமட்டுமின்றி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரும் நாளை கூடுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் எதிர்க்கட்சிகளிடயே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த கூட்டத்தை கூட்ட சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்தார்.

அதன்படி எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் டெல்லியில் இன்று மாலை கூடியது. இதில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின், சரத்பவார், தேவகவுடா, பரூக் அப்துல்லா, அரவிந்த் கேஜ்ரிவால்,

சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். எனினும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

தேசிய அளவில் கூட்டணி அமைப்பதா? அல்லது மாநில அளவில் கூட்டணியா? என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

அதுபோலவே பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது, முக்கியமான பிரச்சார யுக்திகள், பாஜக அரசுக்கு எதிராக மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.