தாராபுரம் அருகே பழனி பாதயாத்ரீகர்கள் மீது பேருந்து மோதி விபத்து : 5 பேர் உயிரிழப்பு..


திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் பாத யாத்திரிரையாக பழனிக்கு சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை, தாராபுரம் அருகே உள்ள குப்பனங்கோவில் பகுதியில் அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த அரசு பேருந்து திடீரென அவர்கள் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் திருப்பூரைச் சேர்ந்த நடராஜ், பரமேஸ்வரி, விஜயா, காளிமுத்து மற்றும் ராஜாமணி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், மூவர் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாராபுரம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். கோவிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.