மோசமாக தலைப்பிட்டு மொத்துப்படும் தினமலர்: பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் தஞ்சம்

இலங்கை வெடிகுண்டு தாக்குதல் குறித்த செய்தியை மோசமான முறையில் வெளியிட்ட விவகாரத்தால் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தினமலர் அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு செய்தியையும் (இந்து மதம், பாஜக, இந்து அமைப்புகள் தொடர்பானவை தவிர) வித்தியாசமான முறையில் தலைப்பிட்டு வெளியிடுவது தினமலர் பத்திரிகையின் பாணி. இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 290 க்கும் மேற்பட்டோர் பலியான துயரச் சம்பவத்தையும், தினமலர் பத்திரிகை தமது வழக்கமான நாலாந்தர எள்ளல் பாணியில் ஓ சேசப்பா எனத் தலைப்பிட்டு வெளியிட்டது.

இது தங்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பலரும் தினமலர் பத்திரிகை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதையடுத்து, தினமலர் அலுவலகத்தின் மீது யாரேனும் தாக்குதல் நடத்தக் கூடும் எனக் கூறி, அந்தப் பத்திரிகை நிர்வாகம் காவல்துறையிடம் பாதுகாப்பு கோரியுள்ளது. இதனால், தினமலர் அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.