தீபாவளி பண்டிகை கொண்டாட 2 நாட்களில் மட்டும் 7 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 7 லட்சம் பேர் சென்னையில் இருந்துசொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

தீபாவளி பண்டிகை வரும் 6-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

இதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மொத்தம் 9 நடைமேடைகள் அமைக்கப்பட்டு அரசு பேருந்துகள் வரிசையாக இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தாம்பரம், கே.கே.நகர், மாதவரம், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்தும் அரசு பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தீபாவளி பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் மட்டும் இதுவரை சுமார் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

இதேபோல், சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கும், கோவைக்கும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் கூட்ட நெரிசல் இன்றி பயணிகள், சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.

தீபாவளியை முன்னிட்டு, கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 3.50 லட்சம் சென்னையில் இருந்து பேர் ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

அந்தவகையில் ‘தீபாவளியொட்டி அரசு பேருந்து, ஆம்னி பேருந்து, ரயில் மற்றும் சொந்த வாகனங்கள் என கணக்கிடும் போது,

கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றிருப்பதாக போக்குவரத்து ஆணையரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று 1,542 சிறப்பு பேருந்துகள் உட்பட 3,817 பேருந்துகளும், நாளை 1700 சிறப்பு பேருந்துகள் உட்பட 3,975 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

இதன் காரணமாக வரும் இரண்டு நாட்களுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.