தீபாவளி பண்டிகை : ரெயில்களில் நாளை முதல் முன்பதிவு ..


தீபாவளிக்கு தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். எனவே, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் ரெயில்களில் கூட்டம் அலைமோதும். எனவே, வெளியூர் செல்லும் பயணிகள், தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். பொதுமக்களின் வசதி கருதி 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை ) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரெயில்களில் வெளியூர் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை முதல் (ஜூலை 5) தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2-ம் தேதி பயணம் செய்யும் பயணிகள் நாளை முன்பதிவு செய்யலாம்.

தீபாவளிக்கு முந்தைய வாரம் வெள்ளிக்கிழமையில் (நவம்பர் 2) இருந்தே பலர் சொந்த ஊர்களுக்கு புறப்படுவார்கள். எனவே, நாளை காலை முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும்.

நவம்பர் 3-ம் தேதி சனிக்கிழமை பயணம் செய்வோர் ஜூலை 6-ம் தேதி, நவம்பர் 4-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் செல்பவர்கள் ஜூன் 7-ம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.