திமுக கூட்டணியின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு..

தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 2-ம் கட்டமாக இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான ஒப்பந்தம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. சிதம்பரம் தவிர விழுப்புரம், திருவள்ளூர் இந்த தொகுதிகளில் ஒன்றும் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக தரப்பில் திருமாவளவனிடம் யோசனை தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதனாலேயே அவருக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என கூறப்படுகிறது.

இது குறித்து திருமாவளவன் கூறியதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதி மற்றும் சின்னம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். கூட்டணி நலன் கருதி, போட்டியிடும் சின்னம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி அறிவிக்கப்படும் என கூறினார்.