அப்படி என்னய்யா சொல்லிட்டாரு ஸ்டாலினு….? : வைகோ ஆவேசத்தைப் பார்த்து திமுகவினர் ஆச்சர்யக் கேள்வி

DMK men in social media

__________________________________________________________________

 

stalin vaikoமுதலமைச்சருக்கு உடல்நலம் சரியில்லாததால், பொறுப்பு முதலமைச்சரையோ, துணை முதலமைச்சரையோ நியமித்து, தற்போது நீடித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சொன்னாலும் சொன்னார், வைகோ முதல் வெங்கய்யா நாயுடு வரை தாவிக் குதிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதுகுறித்து திமுக ஆதரவாளர்கள் தங்கள் வலைப்பக்கங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதில் இருந்து சில பகுதிகள்….

 

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி மருத்துவ மனையில் போய்ப் படுத்திருந்தாரே … அப்போது இந்தக் கேள்வி எழவில்லையே என்று அலறுகிறார் வைகோ. “ஜெயலலிதா மருத்துவமனைக்கு சென்றால் அது உடல்நலக் குறைவு. கருணாநிதி மருத்துவமனைக்கு சென்றால் அது படுத்துக் கொள்ள” என்ற அவரது அரசியல் நாகரிகம் சார்ந்த பார்வையில் சங்க இலக்கியத்தின் நயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் அதில் தோய்ந்திருக்கும் அரசியல் நயவஞ்சகத்தைத்தான் சகிக்க முடியவில்லை. கருணாநிதி மருத்துவமனையில் இருந்த போது, துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருந்தாரே அதையும் வைகோ வசதியாக மறந்து போனார். திமுக செய்ததைத் தானே இப்போது அதிமுக செய்ய வேண்டும் என ஸ்டாலின் சொல்கிறார். இதற்கு ஏன் இவ்வளவு கொந்தளிக்க வேண்டும்.

 

வைகோவுக்கு அதிமுகவை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்கான காரணமும் அனைவரும் அறிந்ததுதான். அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காகவே மக்கள் நலக் கூட்டணி என்ற ஒன்றைக் கட்டமைத்து, ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்கிய அன்புச் சகோததரர் ஆயிற்றே!

 

இந்தத் திருநாவுக்கரசருக்கு என்ன வந்தது என்றுதான் தெரியவில்லை. அவர் வேறு பொறுப்பு முதலமைச்சரெல்லாம் தேவையில்லை என்கிறார். கேட்டால் தேர்தலுக்குத்தான் கூட்டணி, முதலமைச்சரின் உடல் நிலைக்கெல்லாம் இல்லை என்கிறார். பழைய பாசமாக இருக்கலாம்.

 

இதற்கிடையே, நட்புறவுக்கு பெயர்போன ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, அதெல்லாம் அமைச்சருங்கோ, மத்தவங்கோல்லாம் இருக்காங்க.. அவுங்க பார்த்துக்குவாங்க… இப்போ அது எதுக்கும் அவசியமில்லை என்று அளந்து விட்டுப் போயிருக்கிறார்.

 

மு.க.ஸ்டாலின் அப்படி என்னப்பா தப்பா சொல்லிட்டாரு… ஒரு மாநிலத்தின் பிரச்னைகளைச் சமாளிக்க ,அரசை நடத்திச் செல்ல அரசு இயந்திரம் இயங்க வேண்டாமா… அமைச்சர்கள் அத்தனை பேரும் ஒன்று அப்பல்லோவில் இருக்காங்க.. அல்லது ஏதாவது கோவில்ல இருக்காங்க… இந்த நிலையில அரசையும், ஆட்சியையும் நடத்திச் செல்ல ஏதாவது ஏற்பாடு செய்யணும்னு சொல்றது அவ்வளவு பெரிய தப்பாய்யா… இருந்தாலும் வைகோ அண்ணனுக்கு இத்தனை ஆவேசமாகாது…

 

ஒண்ணு மட்டும் தெரியுது… இப்பவும் இவங்களுக்கு திமுகவை எதிர்க்குறதுதான் முக்கியமா இருக்கே தவிர, மத்ததெல்லாம் அப்புறம்தான்…

 

_______________________________________________________________________