சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ரூ.64 லட்சம் மதிப்புள்ள கஜா புயல் நிவாரண பொருட்கள்: ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ரூ. 64, 48, 500 மதிப்புள்ள பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு அனுப்பி வைத்தார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட  மாவட்டங்களுக்கு திமுக சார்பில் மாவட்டம் தோறும்  நிவாரண பொருட்களை அனுப்பி வைக்குமாறு திமுக தலைமை  உத்தரவிட்டது  இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்  புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களை  திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு திமுகவினர் தொடர்ந்து அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ரூ. 64, 48, 500  மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது இதில் சேலைகள், வேட்டிகள், லுங்கிகள்,பிஸ்கட், கொசுவர்த்தி குழந்தைகளுக்கான பால்பவுடர், பாய், போர்வை பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட பொருட்கள் 8 சரக்கு லாரிகள் மூலம் திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

திமுக தலைவர் ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார். திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு  அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் வில்லிவாக்கம் ரங்கநாதன் எழும்பூர் ரவிச்சந்திரன் திருவிக நகர் தாயகம் கவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக திமுக மகளிரணி சார்பில் 3டன் அரிசி 220கிலோ பருப்பு 7பெட்டி மருந்துகள் உள்ளிட்ட ரூ. 12லட்சம் மதிப்பிலான பொருட்கள் லாரி மூலம் அனுப்பிவைக்கபட்டன.

இதனை கொடியசைத்து அனுப்பி வைத்த திமுக தலைவர் ஸ்டாலின் மகளிர் அணியின் பணியைப் பாராட்டி அவர்களுடன் குழு படம் எடுத்துகொண்டார்.

மொத்தமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து இன்று மட்டும் சுமார் 76 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.