திமுகவுடனான உறவு இணக்காமனது, வலுவானது: திருமாவளவன்

 

திமுகவுடனான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறவு இணக்கமாகவும், வலுவாகவும் இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

திமுக தலைவர் மு க ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தமது கட்சியினருடன் சென்னை அறிவாலயத்தில் இன்று நேரில் சந்தித்தார். சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது:

 

திமுக தலைவர் ஸ்டாலினை  மரியாதை நிமித்தமாக நான் சந்தித்தேன். டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறும் மாநாடு குறித்து அவரிடம் பேசினேன். கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் கலந்து ஆலோசித்தோம். இது தோழமையான சந்திப்பு திமுகவிற்கும் விசிகவுக்கும் இடையே பூசல் இருப்பதாக சிலர் வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.

 

திமுகவோடு விடுதலை சிறுத்தைகளின் நட்பென்பது இணக்கமாகவும், வலுவாகவும் இருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் வலிமையோடு தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை விசிக தொடர்ந்து  வலியுறுத்திவருகிறது. மத்தியில் சனா தானா கட்சிகள் வலுப்பெறக் கூடாது என்பதற்காக பல முயற்சிகளை தமிழகத்தில் மேற்கொண்டு வருகிறோம்.

 

உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்த தயாராக இல்லை. 18 சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடக்க வேண்டும். ஆளுங்கட்சி தரப்பில் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேர்தல் நடத்துவதற்கு உரிய அடையாளம் தென்படவில்லை. இது தள்ளிப் போகும் வாய்ப்பு இருக்கிறது.

 

காவிரி ஆற்றின் குறுக்கே மீண்டும் அணை கட்டுவதற்கு முயற்சி ஏற்படுத்துவது கண்டனத்துக்குரியது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்தது கண்டிக்கதக்கது. இதனை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இது மீண்டும் கர்நாடகா – தமிழ்நாட்டிற்கு இடையேயான உறவில் பதட்டத்தை ஏற்படுத்தும். எனவே மத்திய அரசின் இந்த முயற்சியை முறியடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.