திராவிடம், பகுத்தறிவு, சமத்துவத்தை உயர்த்திப் பிடிப்பேன்: திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் உரை..


திமுக பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் பேசும்போது, திமுகவின் கனவை நிறைவேற்றுவதற்காக இன்று புதிதாய் பிறந்திருப்பதாக தெரிவித்தார்.

திமுக தொடங்கப்பட்டபோது பொதுச்செயலாளராக அண்ணா பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதி கட்சியின் தலைவர் ஆனார்.

தொடர்ந்து 50 ஆண்டுகள் தலைவராக அவர் பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவரது மறைவிற்கு பிறகு, கட்சியின் 2-வது தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் பொதுக்குழுவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டார்.
பின்னர் பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

இந்தப் பொதுக்குழுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “என் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளே, நான் தலைவர் கலைஞர் இல்லை. அவரைப் போல் பேசத் தெரியாது. அவரைப் போல் மொழி ஆளுமை கிடையாது. ஆனால், எதையும் முயன்று பார்க்கும் துணிவு கொண்டு இருக்கிறேன்.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என நான் வாழ்ந்ததாக கலைஞர் என்னைப் பாராட்டியுள்ளார். உழைப்பு உழைப்பு உழைப்பு என்பது எனது பெயரின் அர்த்தம் என கூறினார் கலைஞர். நானும் என் வாழ்நாள் முழுவதும் உழைப்பு உழைப்பு உழைப்பு என வாழ்வேன்.

தன்னை விட கட்சி பெரியது என்று கூறுவார் கலைஞர். அதேபோல், என்னையும் விட திமுக கட்சியே பெரியது. எனக்கு ஒரே ஒரு குறைதான், கலைஞர் இல்லை என்பதுதான்.

அதற்குப் பதிலாகத்தான் பேராசிரியர் நம்முடன் இருக்கிறார். கலைஞர், பேராசிரியர் க.அன்பழகனை தனது அண்ணன் என்று கூறுவார்.

அப்படியென்றால், அவர் எனது பெரியப்பா. அப்பாவிடம் நல்ல பெயரை வாங்குவதை விட பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவதுதான் கண்டினம். அடுத்த தலைவராகும் தகுதி ஸ்டாலினுக்கு உள்ளது என்று கூறியவர் பெரியப்பா.

நான் பல பதவிகளை வகித்திருந்தாலும், கலைஞரின் மகன் என்பதை விட கலைஞரின் தொண்டன் என கூறுவதுதான் எனக்குப் பெருமை. பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதி போன்ற நான்கு தூண்களை அடிப்படையாக கொண்டது திமுக. திராவிடம், சமத்துவம், சுயமரியாதை கொள்கைகளை நான் உயர்த்திப்பிடிப்பேன்

மத்திய அரசும் மாநில அரசுகளும் அதற்கு எதிராக செயல்படுகின்றன. தமிழகத்தில் சுயமரியாதைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. அதிமுக சுயமரியாதையை இழந்து, தமிழகத்தை கூர் போட்டு விற்றுக்கொண்டு இருக்கின்றன.

சமூகத் தீமைகளை அகற்றுவதே நமது முதல் கடமையாகும். இந்தியா முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

இன்று நீங்கள் பார்க்கும், கேட்கும் முக ஸ்டாலினாகிய நான், இன்று வேறோருவனாக பிறக்கிறேன். திமுகவின் மரபணுக்களோடு புதிய எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்தோடு பிறந்திருக்கிறேன்.

என்னோடு உடன்பிறந்திருக்கக்கூடிய அனைவரையும் வாழ்த்துகிறேன். நான் ஒரு கனவு கண்டேன், எனது கனவுகளை நான் தனியாக செய்ய முடியாது, தொண்டர்களுடன் இணைந்தே இதை செய்ய முடியும். தலைமைக்கு அனைவரும் சமமே.

கலைஞர் இல்லாத அறிவாலயத்தை, கோபாலபுரத்தை, இந்த மேடையை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. என் கடைசி உயிர் உள்ளவரை என் உயிரினும் மேலான தமிழினமே உனக்காக நான் உழைப்பேன், உனக்காக நான் போராடுவேன் நான் உறுதிமொழியேற்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

அவரின் பேச்சைக் கேட்டு கட்சியின் பொருளாளராக பதவியேற்றுள்ள துரைமுருகன் உட்பட, கூட்டத்தில் பங்கேற்ற பலரும் உணர்ச்சி வசம் பொங்க, கண்ணீர் சிந்தினர்.